திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.1 கோயில் (சிதம்பரம்) பண் - காந்தாரபஞ்சமம் |
ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்
அந்தணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே
பாடினாய்மறை யோடுபல் கீதமும்
பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே.
|
1 |
கொட்டமேகம ழுங்குழ லாளொடு
கூடினாயெரு தேறினாய் நுதல்
பட்டமேபுனை வாய்இசைபாடுவ பாரிடமா
நட்டமேநவில் வாய்மறை யோர்தில்லை
நல்லவர்பிரி யாதசிற் றம்பலம்
இட்டமாவுறை வாயிவைமேவிய தென்னைகொலோ.
|
2 |
நீலத்தார்கரி யமிடற் றார்நல்ல
நெற்றிமேலுற்ற கண்ணி னார்பற்று
சூலத்தார்சுட லைப்பொடிநீறணி வார்சடையார்
சீலத்தார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
சேர்தலாற்கழற் சேவடி கைதொழக்
கோலத்தாயரு ளாயுனகாரணங் கூறுதுமே.
|
3 |
கொம்பலைத்தழ கெய்திய நுண்ணிடைக்
கோலவாண்மதி போல முகத்திரண்
டம்பலைத்தகண் ணாள்முலைமேவிய வார்சடையான்
கம்பலைத்தெழு காமுறு காளையர்
காதலாற்கழற் சேவடி கைதொழ
அம்பலத்துறை வான்அடியார்க் கடையாவினையே.
|
4 |
தொல்லைஆரமு துண்ணநஞ் சுண்டதோர்
தூமணிமிட றாபகு வாயதோர்
பல்லையார்தலை யிற்பலியேற்றுழல் பண்டரங்கா
தில்லையார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
சேர்தலாற்கழற் சேவடி கைதொழ
இல்லையாம்வினை தானெரியம்மதி லெய்தவனே.
|
5 |
ஆகந்தோயணி கொன்றை யாய்அனல்
அங்கையாய்அம ரர்க்கம ராஉமை
பாகந்தோய்பகவா பலியேற்றுழல் பண்டரங்கா
மாகந்தோய்பொழில் மல்குசிற் றம்பலம்
மன்னினாய்மழு வாளினாய் அழல்
நாகந்தோயரையாய் அடியாரைநண் ணாவினையே.
|
6 |
சாதியார்பளிங் கின்னொடு வெள்ளிய
சங்கவார்குழை யாய்திக ழப்படும்
வேதியாவிகிர்தா விழவாரணி தில்லைதன்னுள்
ஆதியாய்க்கிட மாயசிற் றம்பலம்
அங்கையாற்றொழ வல்லடி யார்களை
வாதியாதகலுந் நலியாமலி தீவினையே.
|
7 |
வேயினார்பணைத் தோளியொ டாடலை
வேண்டினாய்விகிர் தாஉயிர் கட்கமு
தாயினாய்இடு காட்டெரியாட லமர்ந்தவனே
தீயினார்கணை யாற்புர மூன்றெய்த
செம்மையாய்திகழ் கின்றசிற் றம்பலம்
மேயினாய்கழலே தொழுதெய்துதும் மேலுலகே.
|
8 |
தாரினார்விரி கொன்றை யாய்மதி
தாங்குநீள்சடை யாய்தலை வாநல்ல
தேரினார்மறு கின்திருவாரணி தில்லைதன்னுட்
சீரினால்வழி பாடொழி யாததோர்
செம்மையாலழ காயசிற் றம்பலம்
ஏரினாலமர்ந் தாயுனசீரடி யேத்துதுமே.
|
9 |
வெற்றரையுழல் வார்துவ ராடைய
வேடத்தாரவர் கள்ளுரை கொள்ளன்மின்
மற்றவருலகின் அவலம்மவை மாற்றகில்லார்
கற்றவர்தொழு தேத்துசிற் றம்பலங்
காதலாற்கழற் சேவடி கைதொழ
உற்றவருலகின் னுறுதிகொள வல்லவரே.
|
10 |
நாறுபூம்பொழில் நண்ணிய காழியுள்
நான்மறைவல்ல ஞானசம் பந்தன்
ஊறும்இன்றமி ழாலுயர்ந்தாருறை தில்லைதன்னுள்
ஏறுதொல்புக ழேந்துசிற் றம்பலத்
தீசனைஇசை யாற்சொன்ன பத்திவை
கூறுமாறுவல்லார் உயர்ந்தாரொடுங் கூடுவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |